சிறுமி பாலியல் வழக்கு.. உறவினர்களே பிறழ் சாட்சியாக மாறியது துரதிஷ்டவசமானது என நீதிபதி வேதனை..!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு சிறுமி, உறவினரான பள்ளி தாளாளரின் வீட்டிற்கு செல்வது வழக்கம். கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டிற்கு வந்து சிறுமிக்கு குடிநீரில் மயக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தாளாளர் அதை வீடியோவாக பதிவு செய்து சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
வழக்கில் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் அனைவரும் பிறழ் சாட்சியாக மாறியது துரதிஷ்டவசமானது என தெரிவித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய சிறுமியின் தந்தை மகளை பாதுகாக்க தவறவிட்டதாக வேதனை தெரிவித்தார்.





