வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட முதியவரை மீட்ட தீயணைப்பு துறையினர்!
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட முதியவரை 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர். வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஆற்றில் குளிக்கவோ இறங்குவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் மதுரை பொன்னிநிறம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ஆரபாளையம் பகுதியில் பாயும் வைகை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்த ஈஸ்வரன் சுமார் 5 கிலோ மீட்டருக்கு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளார். பின்னர் குருவிக்காரன் பாலம் அருகே மணல் மேட்டில் ஈஸ்வரன் சிக்கி இருப்பதை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி கயிறு கட்டி அவரை பத்திரமாக மீட்டனர்.






