அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் மார்ச் 15 ஆம் தேதி, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நிதி நிலை அறிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ-க்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21 ஆம் தேதி சட்டப்பேரவையில் பதில் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.இன்றைய கேள்வி நேரத்தின் போது செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பாபு, ”இலத்தூர் ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் ஊராட்சி மலையம்பட்டு கிராமத்தில் குழந்தைகள் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? அதே போல், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ”மலையம்பட்டு கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டிய தேவை வரவில்லை. மேலும், அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, ”பணிச்சுமை அதிகமாக இருப்பதால் எப்போது பணியாளர்களை நியமிப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், ”அங்கன்வாடியில் 7900 புதிய பணியாளர்கள், 8900 சத்துணவு சமையலர்களை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பணியாளர்கள் நியமனம் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.





