ஏப்ரல் 6-க்கு பிறகு தமிழகத்தில் லாக்டவுனா? சுகாதாரச்செயலாளர் பதில்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பின் முழுஊரடங்கு அமலாகும் என்ற தகவலை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் என்றும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சித்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்று அதிகம் உள்ள முதல் 8 மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 7ம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கும். தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்று பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.
அதேநேரம் அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். பொது மக்கள் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு தர வேண்டும். கோவிட் நேரத்தில் தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் சுகாதாரத்துறை யிடம் கேட்டுக் கொண்டது. அற்கான முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.
தமிழகத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிப்க்கப்படும். வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். முக கவசம் அணிந்துதான் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் . பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.





