தவெக நிர்வாகி பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்தை வருங்கால தமிழக முதல்வர் என போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட பகுதியில், ‘தளபதியை பொதுக்குழுவிற்கு அழைத்து வரும் தவெக பொதுச்செயலாளர் வருங்கால முதலமைச்சர் வருக’ என சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் பி.சரவணனின் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் அதிகாலை முதல் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சரவணன் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். அவர் கொடுத்த பேட்டியில், தமிழக வெற்றி கழக பொது செயலாளர் என்.ஆனந்தை புகழ்ந்து ஒட்டிய போஸ்டருக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இவ்வாறு செய்திருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செங்கல்பட்டுக்கும் எங்கள் மாவட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் இதுகுறித்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், சில விஷமிகள் இதுபோன்ற போஸ்டரை நான்கு இடங்களில் ஒட்டி இருக்கின்றனர் என்றும், அவர்கள் மீது புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.






