பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் கைது..!
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார்.
அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பதினொன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறிய நிலையில் சில மாணவிகள் கலந்துகொண்டனர்.
அந்த மாணவிகளிடம் கிறிஸ்டோபர் நெருங்கி பழக முயற்சித்துள்ளார். மேலும் பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த மாணவி ஒருவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த நிலையில், பயந்து போன மாணவி தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் கடந்த மாதம் 29 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் பதுங்கியிருந்த தலைமையாசிரியர் கிறிஸ்டோபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.





