பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் தேர்தலில் வாக்கு போடலாம்: தேர்தல் அதிகாரி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னையில் அளித்த பேட்டி: வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இவர்களுக்காக, 88,900 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். சுமார் 4.17 லட்சம் பேர், வாக்குப்பதிவு நாளில் தேர்தல் தொடர்புடைய பணியில் ஈடுபடுவர்.
பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவெளியின்றி 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சாவடியில், உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படும். உடல் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் மாலை 6மணிக்கு பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்படும். கொரோனா நோயாளிகளும் மாலை 6 மணிக்கு பிறகு பிபிஇ உடையுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படும்.
சுமார் 10,813 வாக்குச்சாவடிகள் தமிழகத்தில் பதற்றமானவை என்றும், சுமார் 530 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை; வாக்காளர்கள், 1950 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம். நேற்று பிற்பகல் 3 மணி வரை சுமார் 428 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.






