பறக்கும்படி அதிரடி சோதனை… ரூ.3.17 கோடி தங்கம் சிக்கியது புதுகையில் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்த்தில் தேர்தலை பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.17 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் உரிய ஆவணங்கள் இல்லாத நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். இதற்காக தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், புதுக்கோட்டை அறந்தாங்கி – பேராவூரணி சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று வழக்கம்போல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பட்டுக்கோட்டையில் இருந்து வந்த ஒரு டெம்போ டிராவலர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், சேலத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தலைமையில் காரைக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பிரபலமான நகைக் கடைகளுக்கு நகைகள் கொண்டு செல்லபட்டது தெரிய வந்தது. அனைத்தும் 11 பார்சல்களாக கட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த, 6.843 கிலோ எடையுள்ள ரூ.3.17 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் ஆகும்.
எனினும் அந்த நகைகளுக்கான எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் அலுவலரிடம் கொடுக்கப்பட்ட நகைகள், கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில ரூ. 6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.





