தேர்தல் ஆணையம் அதிரடி! கோவை கலெக்டர், போலீஸ் கமிஷனர் மாற்றம்!!
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாற்றாப்பட்டு, புதிய ஆட்சியராக நாகராஜனும், காவல் ஆணையர் சுமித் சரணுக்கு பதிலாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் விதிமீறல்கள் உள்ளிட்ட புகார்கள் எழுவது வாடிக்கை. இதன் மீது, மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார். இத்தகைய விதிமீறல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டாலோ அல்லது சுணக்கம் அல்லது பாரபட்சம் உள்ளிட்ட புகார்கள் எழுந்தாலோ அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவ்வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியும், மாநகர காவல் ஆணையர் சுமித் சரனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் மீது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக எஸ்.நாகராஜன் மற்றும் காவல்துறை ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.






