வத்த குழம்பு, மோர் குழம்பு உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகள் மட்டுமே நமக்கானது.பிட்சா பர்கர் போன்றவை நம் காலநிலைக்கு ஏற்றதல்ல – வேளாண்பல்கலை பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு !!!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 41 வது பட்டமளிப்பு விழாவில் நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 1,385 மாணவர்களுக்கு, இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மேற்படிப்பு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர், விழா மேடையில் குடியரசுத் துணைத்தலைவர் பேசியதாவது :
நம்நாட்டின் அவசியத் தேவை விவசாயம்.எந்த வானிலையையும் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு லாபகரமாகவும், அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய பயிர் ரகங்கள் அவசியமாகும். உணவும்,சத்தும் பல கோடி மக்களுக்கு வழங்கப்படவேண்டும். அதற்கு நவீன விவசாயம் அவசியம். கொரோனா பரவலால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது என்று பேசினார்.
மேலும், 2021ஆம் ஆண்டு இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு வளர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் வலிமையான நாடாக இந்தியா மாறும். கொரோனா தொற்று பல துறைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. ஆனால்,விவசாயத்தை பெரிதளவில் பாதிக்கவில்லை.
கடந்த ஆண்டில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு 59 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக அதிகரித்துள்ளது.
விவசாயிகளுக்கு விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து, விவசாயக்கருவிகள், விவசாயக்கடன் ஆகியவை கொரோனா ஊரடங்கு சமயத்திலும் வழங்கி விவசாயம் பாதிக்காத அளவில் தடுத்தது. 2021 ல் காரிப் பருவத்தில் 144.52 மில்லியன் டன்னாக உணவு தானிய உற்பத்தி உயர்ந்துள்ளது. கடந்த 2019– 20 ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 143.38 மில்லியன் டன்னாக இருந்தது. பெருகி வரும் மக்கள் தொகை நகர மயமாக்கல், புவி வெப்பமடைதல், மழை குறைவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவசாயத்தை பாதிக்கிறது. நிலத்தடிநீர் மாசடைகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும்,குறிப்பாக தமிழகத்தில் நிலத்தடி நீர் மாசடைவது அதிகரித்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே,வறட்சியை எதிர்க்கொள்ளும் விதை, நீர் சேமிப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகியவை அவசியமாகும். தமிழ்நாடு இந்த விஷயத்தில் சிறப்புடன் தனித்தண்மையுடனும் விளங்குகிறது. 2019 ம் ஆண்டு நீர் மேலாண்மைக்கான ‘ஜல்சக்தி’ விருதை கடந்த நவம்பர்14 ஆம் தேதி நான் தான் வழங்கினேன்.

விவசாயத்துறையில் பல புதிய யுக்திகள் மற்றும் பல புதிய பயிர் ரகங்களை தமிழக விவசாயிகள் ஏற்றுக்கொள்வது சிறப்பானதாகும்.
விவசாயத்துறையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள மரபணு தொகுப்பு அதிக விளைச்சலை அளிக்கும். புதிய பயிர் ரகங்கள் தான் சவால்களை எதிர்கொள்ளும். எனவே,தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அதற்கான ஆராய்ச்சிப் பணிகளை தொய்வின்றி செய்து வருகிறது. புதிய தொழில்நுட்பம் மற்றும் மரபணு ஆராய்ச்சி காரணமாக விவசாய உற்பத்தி 30 சதவீதம் உயர்ந்துள்ளது.செலவு 20 சதவீதமாக குறைந்துள்ளது.
எதிர்காலத்தில் வரும் சவால்களை எதிர்க்கொள்ள சூரியசக்தியை அதிகம் பயன்படுத்துவது, நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதே சிறந்ததாகும். விவசாயத்துறை மேலும் சிறப்படைய கடந்த 2010 ம் ஆண்டே தமிழ்நாடு வேளாண் பல்கலை நானோ ஆராய்ச்சிக்கென்று தனிப்பிரிவை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது என்றும் பேசினார்.
மேலும், பிரதமரின் கிஷான் திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் உதவித் தொகையாக 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. நாடு முழுக்க இத்திட்டம் 72 சதவீத விவசாயிகளை சென்றடைந்துள்ளது.
உதவித் தொகை மற்றும் மானியம் நாடு முழுக்க உள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
உற்பத்திக்கான விலை, சந்தைப்படுத்துதல், பொருளாதார உதவி, விவசாயத்தை வளர்க்க உதவுகிறது. அனைவரும் கூட்டுசேர்ந்து விவசாயத்தை மேம்படுத்த உதவ வேண்டும். பட்டம் பெறும் மாணவ மாணவியர் புதிய தொழில் நுட்பத்துக் காகவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்பணிக்க வேண்டும்.
கொரோனா பாதிப்பு மாணவர்களின் முன்னேற்றத்தை எந்த சூழலிலும் தடுத்து விடக்கூடாது. புதிய சவால்களை எதிர்கொண்டு மாணவ, மாணவியர் சாதனைகளை படைக்க வேண்டும். விவசாயிகள் அவர்களுக்காக மட்டும் உழைக்காமல் நாட்டு மக்களுக்காக உழைக்கின்றனர். அவர்கள் மீது அனைத்து துறையினரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும்,இந்தியாவில் நூற்றுக்கணக்கான உணவு வகைகள் உள்ளன. குறிப்பாக தமிழகத்தின் வத்த குழம்பு,மோர் குழம்பு உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகள் மட்டுமே நமக்கானது. பிட்சா, பர்கர் போன்ற உணவுகள் நம் காலநிலைக்கு உகந்ததல்ல. ஆசிரியர்களுக்கு மாற்றாக கூகுள் இருக்க முடியாது. பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங்பேடி, வேளாண் பல்கலை துணை வேந்தர் குமார், பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.







