மேட்டுப்பாளையம் : சென்னாமலை கரடு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க கூண்டு. வனத்துறையினர் தீவிர முயற்சி !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் சென்னாமலை கரடு உள்ளது. சென்னாமலை கரடு வனப்பகுதியை ஒட்டி மோத்தேபாளையம், அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சென்னாமலை கரடு வனப்பகுதியில் இருந்து வரும் சிறுத்தை கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து ஆடு,மாடு மற்றும் நாய்களை அடித்துக்கொன்று அடிக்கடி அட்டகாசம் செய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னாமலை கரடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின் பேரிலும்,மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுரையின் பேரிலும், சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் மேற்பார்வையில் சென்னாமலை கரடு வனப்பகுதியை ஒட்டி சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. மேலும், வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு செலுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சென்னாமலை கரடு பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்ததும்,பின்னர் அச்சிறுத்தை கம்பி வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.







