புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் ஏழு செண்டி மீட்டரும், ஒட்டன்சத்திரம் மற்றும் கடலூரில் தலா ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் கனமழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலையில் வெயில் அடிக்கத் தொடங்கிய நிலையில் மதியம் முதல் புதுக்கோட்டை ஆலங்குடி கீரமங்கலம் திருமணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, கும்மிடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, கீழவளவு, கீழையூர், தாமரைப்பட்டி, வெள்ளலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.






