45 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சாமியார் மீது புகார்..!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே 45 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதிகை நகர் பகுதியை சேர்ந்த கேசவமூர்த்தி என்பவர் தோல் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம் சாந்தகுமார் என்ற சாமியார் தான் தொழில் செய்து வருவதாகவும் அதில் பத்து லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அதனை மூன்று மாதத்தில் 5 கோடி ரூபாயாக திருப்பி தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனை நம்பி கேசவமூர்த்தி 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பலரிடம் பணத்தை பெற்று சுமார் 45 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணத்தை திருப்பி கேட்டபோது கடந்த ஆகஸ்ட் மாதம் 50 லட்ச ரூபாய்க்கான காசோலையை கேசவமூர்த்தியிடம் சாமியார் வழங்கியதாக தெரிகிறது.
ஆனால் அந்த காசோலையை பணமின்றி திரும்பியதால் அது குறித்து கேட்டதற்கு சாமியார் மிரட்டியதாக கேசவமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேசவமூர்த்தி புகார் அளித்துள்ளார்.







