ராமநாதபுரம் அருகே பட்டா நிலத்தில் சவடு மண் என்ற பெயரில் கொள்ளை போகும் மணல்..! காங்கிரஸ் புள்ளிக்கு துணை போகும் அதிகாரிகள்!!
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே ஆற்றுப்படுகையோரம் உள்ள பட்டா நிலத்தில் சவடு மண் எடுக்க அனுமதி வாங்கி விட்டு மணல் கொள்ளை பகிரங்கமாக கொள்ளையடிக்கப்படுகிறது. காங்கிரஸ் புள்ளி ஒருவரின் இந்த அடாவடிக்கு அரசு அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் நிறைந்த பகுதி ஆகும். இப்பகுதி ஆற்றுப் படுகை நிறைந்த வளமான பகுதியாகும். இயற்கை வளங்களை யாராலும் அவ்வளவு எளிதில் உருவாக்க முடியாத நிலையில், இந்த வளங்களை பாதுகாக்க வேண்டிய அரசுத் துறையினர் இயற்கை வளங்களை அழிப்பதற்கு துணை போவது தான் கொடுமை என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையுடன் புலம்புகின்றனர்.

ஆற்று மணல் கொள்ளையே கொள்ளை
தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெரும்பாலான மணல் குவாரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பாரணூர், கலங்காப்புலி, வெட்டுக்குக்குளம் போன்ற பகுதிகளில் பட்டா நிலம் என்ற பெயரில் சவடுமண் அள்ளுவதாக பெயருக்கு பெர்மிஷன் வாங்கி விட்டு ஆற்று மணல் கொள்ளையே கொள்ளை போகிறது. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படி பட்டா நிலத்தில் சவடுமண் என்ற பெயரில் மணல் கொள்ளையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் என்பவர் அரசியல்வாதியாக மட்டுமின்றி மணல் மாஃபியாவாக உருவெடுத்து வருவது மனவேதனை அளிப்பதாக கூறுகின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும்.

மாவட்ட கனிமவள அதிகாரி ஒப்புதல் மூலம் அரசு நிர்ணயித்த அளவைவிட பெரும் பள்ளத்தாக்கு போல் மணல் திருட்டு அரங்கேறி வருகிறது. இதற்கு தலையாரி முதல் மேல் மட்ட அதிகாரிகள் வரை குவாரி ஒப்பந்ததாரர்கள் பல லட்சம் வரை கப்பம் கட்டுவதாகவும், குவாரிக்கு அனுமதி வழங்கிய பிறகு அதிகாரிகள் ஆய்வு நடத்துவதில்லை என்றும் முறையாக ஆய்வு நடத்தினால் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இவையனைத்தும் ஆர். எஸ். மங்கலம் வருவாய்த்துறையினர் தெரிந்தும் தடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே இப்படி மணல் கொள்ளை போவதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள் .
வளங்களை சுரண்டும் பேர்வழி
அரசியல் செல்வாக்கல் இயற்கை வளங்களை சுரண்டும் பேர்வழிகளையும், அதற்கு துணை போகும் அரசுத் துறையின் அத்துணை லஞ்ச,ஊழல் எடுபிடிகளையும் களைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.







