சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கூடாது..!
ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உட்பட 19 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது வருகிற செவ்வாய்க்கிழமை வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தானை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொறொடா உத்தரவிட்டு எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று விளக்கம் அளிக்க கோரி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து எம்எல்ஏக்கள் சார்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எம்எல்ஏக்கள் கட்சி தாவும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் அவர்கள் காங்கிரசில் நீடிப்பதாகவும் அதிருப்தி எம்எல்ஏக்களின் சார்பில் வாதிடப்பட்டது. ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தான் சச்சின் பைலட் பேசியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வழக்கு தேவையற்றது என்றும் எம்எல்ஏக்களின் விளக்கத்தை சட்டப் பேரவைத் தலைவரிடம் நேரடியாக அளித்திருக்கலாம் என்றும் சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு வருகிற செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.






