சாத்தான்குளத்தில் முதல் நாளன்று நடந்த சிபிஐ விசாரணை..!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை தொடங்கி இருக்கும் சிபிஐ அதிகாரிகள் குழுவினர் முதல் நாளில் ஜெயராஜின் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணையை தொடங்கி இருக்கும் சிபிஐ முதற்கட்டமாக அவ்விருவரின் வீட்டிற்கும் நேற்று சென்றனர்.
ஜெயராஜின் மனைவி மற்றும் மகள், தங்கை ஜெயா அவரது கணவர் ஜோசப் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து இதுவரை நடைபெற்ற விசாரணையின் கோப்புகளை பெற்றுக்கொண்டனர். ஜெயராஜ் வீட்டில் காலை 11:30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை விசாரணை நடந்தது.
இதேவேளையில் சிபிஐயின் மற்றொரு பிரிவினர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தாக்கப்பட்டு காவல் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வரும் போது நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் ஜெயராஜின் தங்கை கணவரான ஜோசப் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இந்த விசாரணையில் வந்த தகவல்கள், ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகள் வீடியோ பதிவாகவும் எடுத்துக்கொண்டனர்.







