--- --:--:-- --

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை..!

9.1

தென்மேற்கு பருவகாற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

 

சங்கலிகுப்பம், மின்னூர், விண்ணமங்கலம், ஆலங்குப்பம், சூலூர், பெரியங்குப்பம், கரும்பூர் ஆகிய இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தாடிக்கொம்பு, சின்னாளப்பட்டி, செம்பட்டி, நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

 

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை, லாலாபேட்டை, தோகைமலை ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை பெய்தது. சோத்துப்பாறை, கும்பக்கரை, முருகமலை, கல்லாறு, வடுகப்பட்டி லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் நேற்று இரவு மழை பொழிந்தது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

Leave a Reply

Right Menu Icon