மேட்டுப்பாளையம் அருகே படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுத்தைக்கு தொடர் சிகிச்சை காரணமாக உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உள்ளதாக வனத்துறை அறிக்கை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மோத்தேபாளையம் சென்னா மலைக்கரடுக்கு அருகில் அறிவொளி நகர் பகுதியில் முள்கம்பி வேலியில் சிக்கி படுகாயங்களுடன் 2 வயது பெண் சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டது.தற்போது மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் உள்ள அரசு மரக்கிடங்கில் உள்ள கட்டிடத்தில் வைத்து வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் தேக்கம்பட்டி அரசு கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் குமார் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை மேற்கொண்டு வருவதால் செய்தியாளர்கள் உட்பட எவரையும் அனுமதிக்கவில்லை.இந்த நிலையில் இதுகுறித்து வனத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் சிறுத்தை மீட்கப்பட்ட போது மார்புப்பகுதியில் உள்ள தசைகள், முதுகெலும்பு,தண்டுவடம் உள்ளிட்ட உடலின் பல இடங்களில் பலத்த காயமடைந்து உடலின் பின்பகுதி செயலிழந்து நீர்ச்சத்து குறைந்த நிலையில் காணப்பட்டதாகவும், காயம்பட்ட இடத்தில் தையல் இடப்பட்டு மருந்து போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,முதல் நாளில் இரத்த நாளங்கள் வழியாக குளுக்கோஸ் தொடர்பான திரவங்கள், ஆன்டிபயாடிக், வைட்டமின் மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று வரை இதே சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,மூன்று முறை மலம் மற்றும் 6 முறை சிறுநீர் கழித்ததாகவும்,ஆனாலும் சிறுத்தையின் உடல் நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை எனவும்,இன்று 16.6.20 அதன் உடல்நிலை சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,சிறுத்தையின் இரத்தப் பரிசோதனையில் இரத்த சோகை இருப்பதும் தெரிய வந்துள்ளது.தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






