32 நாட்களாக தினமும் 25 குழந்தைகளுக்கு உணவளித்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தினமும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 25 குழந்தைகளுக்கு உணவளித்து வரும் அரசு பள்ளி ஆசிரியருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சீனிமடை, சன்னதி புதுக்குளம் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையின்றி உணவிற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அவர்கள் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர்.
ஒருசிலர் மட்டுமே சமைத்தே உணவை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மானாமதுரை அருகே சன்னதிபுதுக்குளம் பகுதியில் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலைச் திட்ட பணிக்காக வந்திருந்த வெளிமாநில தொழிலாளர்கள் உணவின்றி சிரமப்படுகின்றனர்.
இதையறிந்த சீனிமடை அரசு பள்ளி ஆசிரியர் பாலாக்குமார், வெளிமாநில தொழிலாளர்களின் 25 குழந்தைகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். அங்குள்ள 100 பேருக்கும் தினமும் குடிநீர் கேன்களை வழங்கி வருகிறார்.
மேலும் பெரியவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஆடை வழங்கியுள்ளார். ஊரடங்கு பிறப்பித்த நாளிலில் இதுவரை 32 நாட்களாக இடைவிடாது உணவு வழங்கி வருகிறார். அவரது செயலை சமூகவலைதளங்களில் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.






