பிரதமர் மோடியிடம் உதவி கோரியயுள்ள உத்தவ் தாக்கரே!
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை மேலவை உறுப்பினர் பதவிக்கு நியமிக்கும் அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் இந்த விஷயத்தில் தலையிடும் படி பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது எம்எல்ஏவாக இல்லாத உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் நீடிக்க வரும் மே 28-ஆம் தேதிக்குள் இரு அவைகளில் ஒன்றில் உறுப்பினராக வேண்டும். கொரொனா அச்சத்தால் தற்போது தேர்தல் நடத்துவதில் சிக்கல் இருப்பதால் மேலவைக்கு உறுப்பினராக நியமிக்க மாநில அமைச்சரவை கடந்த 18ம் தேதி பரிந்துரைத்தது.
இதன் மீது ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அமைச்சரவை சார்பில் ஒரு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கும் ஒப்புதல் வராத நிலையில், உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியானது.
பிரதமரிடம் பேசிய உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் அரசியல் தரமற்ற சூழ்நிலையை ஏற்படுத்த சதித்திட்டம் நடைபெறுவதாக கூறியதாக தெரிகிறது.







