கொரோனா : சென்னையில் பிரபல நரம்பியல் மருத்துவர் உயிரிழப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான 60 வயது மருத்துவரும் அவருடைய மகளும் கொரோனா பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த சில நாட்களாக மருத்துவரின் உடல் நிலை மோசமான நிலையில் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை மருத்துவர் உயிரிழந்தார்.சென்னையில் பிரபல நரம்பியல் நிபுணராக திகழ்ந்த மருத்துவர், கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நெல்லூரைச் சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், கொரோனா பாதிப்புக்கு சென்னையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் கொரோனா தொற்றால் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் 3 மருத்துவர்களுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







