“மக்களே நாள் முழுவதும் வீட்டில் தஞ்சம் அடையுங்கள்!!” நாளை மறுநாள் பேருந்துகள் ஓடாது..! ரயில்களும் ரத்து..! முழு கடையடைப்பும் உண்டு!!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை மறுதினம் மக்கள் ஊடங்கு நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது. ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நாள் முழுவதும் வீடுகளில் தஞ்சம் புகுந்து பிரதமர் மோடியின் அழைப்புக்கு தலை வணங்குவது உறுதியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த கொடிய வைரஸ் பெரும் விளைவை ஏற்படுத்தாது என்று நினைக்க வேண்டாம். எனவே முன்னெச்சரிக்கையாக வெளிநடமாட்டத்தை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்காக, பரீட்சார்த்தமாக ஒரு நாள் முழுவதும் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் வகையில், மக்கள் தாங்களே முன் வந்து வரும் 22ந் தேதி மக்கள் ஊரடங்கை மேற்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.
அன்று மாலை 5 மணிக்கு அவரவர் வீட்டு மாடிகளில் நின்று, கொரோனாவுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மருத்துவர்கள், செவி லியர்கள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மணியோசை எழுப்பியும், கை தட்டல் மூலமும் உற்சாகப்படுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்க் கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை மறுதினம் மக்கள் ஊரடங்கை முன்னிட்டு முழு கடையடைப்பு நடத்தப்படும் என வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசுப் பேருந்துகளும் அன்று காலை முதல் இரவு 9 மணி வரை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களும் நாளை இரவு 10 மணி முதல் மறுநாள் இரவு வரை இயக்கப்படாது எனவும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தனியார் நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறை அறிவித்துள்ளன.

மக்களும் 22ந் தேதிக்கான தங்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை இப்போதே வாங்கி பத்திரப்படுத்த தொடங்கி விட்டனர். எனவே நாளை மறுதினம் மக்கள் ஊரடங்கை மக்கள் வெற்றிகரமாக்கி, பிரதமரின் அழைப்புக்கு தலை வணங்குவது உறுதியாகியுள்ளது என்றே கூறலாம்.






