பயணிகளால் அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி..!
பேருந்தில் பயணம் செய்தவர்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடி கையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பரலூரில் சுங்கச் சாவடி உள்ளது.
அவ்வழியே திருச்சிக்கு சென்ற அரசு பேருந்து ஒன்றின் ஓட்டுனருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அரசு பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை சுங்கச்சாவடிக்கு குறுக்கே நிறுத்தியதால் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நீண்ட வரிசையில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காத்திருந்தன.
இதனையடுத்து பல்வேறு பேருந்துகளில் பயணித்தவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த கணினி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டு வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டது.
சுங்கச்சாவடி தாக்கப்பட்டதை அடுத்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்களிடமும் பயணிகள் சிலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.






