எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்..! கொலையாளிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த நபர் கைது!!
குமரி மாவட்டம் களியக்காவிளையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கொலையாளிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த எட்டாம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். வில்சனை சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடியது முகமது சமீம், தவ்பிக் என்பதும், இரண்டு பேரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதனால் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்த நபரை தமிழக க்யூ பிரிவு போலீசார் பெங்களூரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இஜாஸ் முகமது என்ற அந்த இளைஞர், லாரி டிரைவராக பணிபுரியும் அவர் மும்பையில் இருந்து 4 துப்பாக்கிகள் வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு துப்பாக்கியை எஸ்.ஐ. வில்சனை கொலை செய்த கொலையாளிகளுக்கு சப்ளை செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் கைது செய்யப்பட்ட இஜாஸ் முகம்மதுவும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





