துப்புரவு பணியாளர் பணிக்கு குவிந்த எஞ்ஜினியர்ஸ்!
கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் வேலைக்கான நேர்காணலுக்கு இன்ஜினியரிங் உட்பட பல பட்டதாரி இளைஞர்கள் குவிந்துள்ளனர். கோவை மாநகராட்சியில் 2000 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் தவிர 1500 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைக்கு 7,000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான நேர்காணல் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயது 21 என்று அதிகபட்ச வயது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.
துப்புரவு பணிக்கான கல்வித் தகுதி தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் நேர்காணலுக்கு வந்த 70 சதவீதம் பேர் குறைந்தபட்சம் எஸ்எஸ்எல்சி கல்வித்தகுதியை கொண்டிருந்தனர். இதுதவிர டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் பட்டதாரிகள், பட்டமேற்படிப்பு படித்தவர்கள் ,இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகளும் வந்திருந்தனர்.
இதுகுறித்து நேர்காணலுக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள் கூறும்போது படித்து முடித்து படிப்பிற்கேற்ற நல்ல வேலை கிடைக்காததாலும், வேலை கிடைத்தாலும் நிரந்தர வேலை கிடைப்பதில்லை என்பதால் இப்பணியில் சேர முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.





