வழக்கு தொடர ஆரம்பிச்சாச்சு..!! மேயர் பதவிக்கு மறைமுக தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு!!!
உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்காக தொடர்ந்தால் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்ததால் விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென நேற்று அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்த தமிழக அரசு, இந்தப் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மறைமுகத் தேர்தல் நடத்துவது, குதிரை பேரத்திற்கு வழி நடத்தும் என்றும், பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறைமுகத் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் , அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீலமேகம் என்ற வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதி இந்தப் பிரச்னையை வழக்காக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார். இதனால் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர் நீலமேகம் தரப்பில் வழக்குத் தொடரப்படும் என்று தெரிகிறது.





