CM விஜய்யின் குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி..!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் முதலமைச்சர் விஜய் பதில் உரை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சட்டசபையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதில் உரை கொடுத்தார். அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழல் குறித்து பேசிய போது டாஸ்மாக் கட்சி நிதி என்று பேசியதும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து சபாநாயகர் அவர்களுக்கு முதல்வர் பேசி முடித்த உடன் எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு வழங்குகிறோம் என்றார்.
திமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையிலும் முதலமைச்சர் விஜய் தனது பேச்சுக்கு நடுவில் குட்டி ஸ்டோரி ஒன்றை எடுத்துரைத்தார். அப்போது ஒரு வயதான ஒருவர் வெயிலின் தாக்கம் காரணமாக நெற்றியில் கை வைத்துக் கொண்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார். அதை பார்த்த சிறுவன் ஒருவன் என்ன தேடிகிட்டு இருக்கீங்கன்னு கேட்டான்? அதற்கு அவர் எங்க உங்க அப்பாவைக் காணோம் என்று கேட்டார். எதிர்க்கட்சிகள் போன்று நானும் இதுப்போன்று சம்பந்தம் இல்லாத கதைகளை சொல்ல முடியும் என்று சொல்லி முடித்தார்.
இதற்கிடையே முதலமைச்சருக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் – பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு – விவசாயிகள் பிரச்சினை – மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு – வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்தது கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் நடந்து கொள்ள வேண்டும்.” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.





