திமுகவில் இணைந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்!
அதிமுகவில் உச்சபட்ச பதவியில் இருந்தவரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கி தனியாக செயல்பட்டு வந்தார். அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு ஓபிஎஸ் முயற்சித்தும், அவரை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனிடையே, கடந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி நடைப்பயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ், அன்று மாலையை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இதனை தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.






