தவறான செய்தியை வாசிக்கமாட்டேன் என்றே ஆளுநர் கூறியுள்ளார் – எடப்பாடி பழனிசாமி
2026ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டும், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்காமல் வெளியேறினார். மேலும், தனது உரையின்போது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் இருக்கும் நிலைமையை, உண்மைத்தன்மை இருந்தால்தான் ஆளுநர் பேசமுடியும். தவறான செய்தியை வாசிக்கமாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார். அதனை இந்த அரசு ஏற்க மறுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது; “இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் என தன்னைத் தானே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கற்பனை செய்துகொள்கிறார். அரசு தயாரித்த உரையைத் தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் சொல்லியுள்ளார். அதில் என்னென்ன தவறுகள் இருக்கிறதோ, அதனை எல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா?
தமிழ்நாட்டில் இருக்கும் நிலைமையை, உண்மைத்தன்மை இருந்தால்தான் ஆளுநர் பேசமுடியும். தவறான செய்தியை வாசிக்கமாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார். அதனை இந்த அரசு ஏற்க மறுக்கிறது. ஆளுநர் உரையில் அவரின் உரை மட்டும்தான் இடம் பெற வேண்டும். ஆனால், முதலமைச்சர் தனது கருத்தை எல்லாம் அதில் பதிவு செய்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்?” என பேசியுள்ளார்.






