கரூரை தொடர்ந்து நாமக்கல் தவெக நிர்வாகிகள் மீதும் பாய்ந்த வழக்கு..!
கூட்ட நெரிசல் தொடர்பாக கரூரைத் தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. அதிக கூட்டம் கூடுவதற்காக வேண்டும் என்றே திட்டமிட்டு விஜய் வருகையை தாமதப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை நாமக்கல்லை தொடர்ந்து கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசல் தொடர்பாக நாமக்கல்லிலும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், செந்தில்குமார், பிரபு, பாலகிருஷ்ணன், விக்னேஷ், இளையராஜா உட்பட 10 பேர் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்து கூட்டத்தை கூட்டுவது உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக மக்கள் கூட்டத்தை கூட்டும் நோக்கத்துடன் தவெக நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் நாமக்கல் வருவதை நான்கு மணி நேரம் தாமதப்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு பல மணிநேரங்களாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும், தாகத்திலும், மருத்துவ வசதி இல்லாமலும் சோர்வடைந்ததாகவும், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினால் கூட்ட நெரிசல் ஏற்படும் என பல முறை எச்சரித்ததாகவும், தாங்கள் சொன்னதை கேளாமல் தவெக நிர்வாகிகள் தொண்டர்களை சரிவர ஒழுங்கப்படுத்தாததால் அசாதாரண சூழல் ஏற்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






