தவெக தலைவர் விஜய் மீது இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி போலீசில் புகார்..!
தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் மீது கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் பரபரப்பு புகாரளித்துள்ளார். கோவையைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் வைஷ்ணவி. இன்ஸ்டாகிராமில் கருத்தியல் பேசி மிகவும் பிரபலமான இவர், மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்திலிருந்து வெளியேறி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்சி தாவல் ஏன்? என்ற கேள்விக்கு பாஜகவின் இன்னொரு வடிவம்தான் தவெக என்றும், அந்த கட்சியில் இளைஞர்களுக்கு முன்னுரிமையே வழங்கப்படுவதில்லை என்றும் குண்டை தூக்கி போட்டார். சமூக வலைத்தளங்களில் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது என்று தனக்கு கண்டிஷன் போடப்பட்டதாக கூறிய வைஷ்ணவி, இன்னும் ஒரு சில காரணங்களை அடுக்கி, தான் தவெகவில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், மூன்று மாதங்களுக்குப் பின் வைஷ்ணவி தவெக தலைவர் விஜய் மீதும், தவெக தொண்டர்களான Virtual Warriors மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தவெகவில் இருந்து வெளியேறிய நாள் முதலே தன்னை பற்றி தவெகவினர் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
தனது புகைப்படங்களை மார்பிங் செய்தும் ஆபாச மீம்ஸ்களை பதிவிட்டும், முகம் சுழிக்க வைப்பதாக தவெக Virtual Warriors மீது வைஷ்ணவி குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக தவெக தலைவர் விஜய் வாய்மொழியாகவோ, அறிக்கையாகவோ கண்டனம் தெரிவிப்பார் என காத்திருந்ததாகவும், ஆனால் இனிமேலும் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை இல்லை என்றும் கூறிய வைஷ்ணவி விஜய் மீதும், தவெக தொண்டர்கள் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Virtual warriors-ன் செயல் ஆபாசமான கருத்துக்கள் அநாகரீகமான அரசியல் விமர்சனங்களை முன்வைப்பதாகக் கூறிய வைஷ்ணவி, கருத்தியல் ரீதியான கேள்விகளை தவெகவினரிடம் முன்வைத்தால் ஆபாசமான, அவதூறான கருத்துக்கள் தான் பதிலாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அநாகரீகமான அரசியலை எவ்வாறு செய்ய வேண்டுமென தவெக Virtual Warriors யிடம் இருந்து கற்று கொள்ளலாம் எனவும் கூறி அதிர வைத்துள்ளார்.





