தாலியை கழற்ற சொன்ன சுங்கத்துறை அதிகாரி.. வைரலான வீடியோ..!
சென்னை விமான நிலையத்தில் பெண்ணிடம் தாலியை கழற்றுமாறு நிர்பந்தித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தவறானது என சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசிய வாழ் இந்திய வம்சாவளிப்பின்னிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தாலியை கழற்றும்படி நிர்பந்தம் செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக அந்த பெண் பேசிய வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் தங்கம் நகைகளை அணிந்து வெளியேற முயன்ற காரணத்தால் அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் தடுத்து நிறுத்தி விசாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்காமலும் சுங்கவரி செலுத்த மறுத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் அணிந்திருந்த நகை கைப்பற்றப்பட்டு உரிய சுங்க சட்ட நடவடிக்கைகள் மூலம் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திய பின்னர் உடனடியாக நகைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.





