தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 847 பேர் பாதிப்பு..!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்திருக்கிறது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் அண்மைக்காலமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட மாநிலங்களில் மட்டுமே கண்டறியப்பட்ட கருப்பு பூஞ்சை தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2ஆம் தேதி தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது என்று மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு இதுவரை 2470 குப்பிகள் கொண்ட மருந்தினை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
தற்போது அதிகரித்துள்ள நிலையில் 30,000 குப்பி மருந்துகளை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கூறப்பட்டதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.




