அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சனாதனத்தை வைத்து போட்டியிடலாமா என திமுகவுக்கு சவால் விடுத்தார். அறநிலையத்துறையை விட்டு தமிழக அரசு வெளியேற வேண்டும் என்றும் அண்ணாமலை பேசினார். செந்தில் பாலாஜிக்கு வந்த நிலை, உதயநிதி, ஆ.ராசாவுக்கும் வரும் என்று கூறிய அண்ணாமலை, ஆட்சி மாறும் போது காட்சி மாறும் என்று எச்சரித்தார்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
பெருந்திரள் கூட்டத்திற்கு நடுவே அண்ணாமலை வந்ததால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்காவை கடந்து செல்ல அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






