மெரினா சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் பலி..!
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. காலை 11 மணிக்கு தொடங்கிய சாகச நிகழ்ச்சி பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு திரும்பிய மக்கள், கடுமையான கூட்ட நெரிசல் சிக்கித் தவித்தனர். இதில் பலர் மயக்கம் அடைந்த நிலையில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.
எதிர்க் கட்சிகள் அரசி நிர்வாக சீர்கேடே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் எனத் தெரிவித்துவருகின்றன. அதேசமய, செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “விமானப் படை கேட்டுக்கொண்டதைவிட அதிகப்படியான வசதிகள் செய்து தரப்பட்டன. அதிக வெப்பத்தின் காரணமாகவே மரணங்கள் நிகழ்ந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் காங்கிரஸ் சார்பில் வழங்கப்படும் என்றும், உயிரிழந்த ஐந்து பேரின் குழந்தைகளின் படிப்பு செலவையும் காங்கிரஸ் ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மெரினா வான் சாகச நிகழ்ச்சி காணவந்து இறந்தவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.





