திருநெல்வேலி- மங்களூர் உட்பட 4 புதிய ரயில்கள் அறிவிப்பு
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று (மார்ச் 6) தமிழ்நாட்டில் நான்கு புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அவை, பாலக்காடு – பொள்ளாச்சி மின்சார ரயில், மயிலாடுதுறை – காரைக்குடி பயணிகள் ரயில், போத்தனூர் – தன்பாத் இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் மங்களூரு – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.
மேலும், திருச்சிராப்பள்ளி – காரைக்குடி மற்றும் காரைக்குடி – விருதுநகர் பயணிகள் ரயில்களின் சேவை வாரத்திற்கு ஆறு நாட்களில் இருந்து இனி தினசரி சேவையாக மாற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாரத்திற்கு மூன்று முறை மட்டும் இயக்கப்பட்டு வந்த சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில், இனி வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படும்.
மங்களூரு சென்ட்ரல் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி உடுமலைப்பேட்டை மற்றும் பரமக்குடி ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். அதேபோல், தாம்பரம் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் பண்ருட்டி நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும்.
புதிய ரயில் சேவைகள், குறிப்பாக மயிலாடுதுறை – காரைக்குடி மற்றும் தன்பாத் – போத்தனூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை தெற்கு மாவட்ட பயணிகள் மற்றும் ரயில்வே ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். ம்ண்டல ரயில்வே பயனர் ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே. பாண்டியராஜா கூறியதாவது, பட்டுகோட்டை மற்றும் திருவாரூரை இணைக்கும் காரைக்குடி – மயிலாடுதுறை ரயில் சேவை என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்தது, அது தற்போது நிறைவேறியுள்ளது. போத்தனூர் – தன்பாத் அம்ரித் பாரத் ரயில், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வணிக ரீதியாக பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
ரயில் பயணிகள் மேலும் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது, பாலக்காடு – பொள்ளாச்சி ரயில் சேவையை பழனி வழியாக திண்டுக்கல் வரை நீட்டிக்க வேண்டும். கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருவதால் வெறும் 60 கி.மீ தூரம் மட்டுமே இயங்கும் இந்த ரயிலை 120 கி.மீ வரை நீட்டித்தால் அது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று வலியுறுத்தியுள்ளனர்.






