அதிமுக ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு..!
சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பரபரப்பான சூழலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஈசிஆர் இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகியுடன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய நிலையில் ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு தமிழக அரசியல் புதிய திருப்பத்தை கொடுத்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் அண்ணா சாலையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் திடீர் சந்திப்பு நடத்தினர். சட்டமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன், ரவி மனோகரன், நத்தம் விஸ்வநாதன் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் அதிமுக எம்எல்ஏ சி.வி சண்முகத்தின் ஈசிஆர் இல்லத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், ரவி மனோகரன், நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி ஆகியோருக்கு கடந்த சில தினங்களாக சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்காத நிலையில் இன்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பறிக்கப்பட்ட பொறுப்புகள் வழங்கப்படும் என அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் அந்த பொறுப்புகள் வழங்கவில்லை என்றும் புதியதாக வழங்கிய பொறுப்புகளை அவர்கள் ஏற்கவில்லை.
திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்களாக நடைபெற்று வரும் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளாத எஸ்.பி.வேலுமணி சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகு கோயம்புத்தூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகை தந்து அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகத்தின் ஈசிஆர் இல்லத்திற்கு வந்து ஆலோசனையில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இவர்கள் ஈசிஆரில் மூன்று மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவாக அனைவரும் சசிகலாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




