ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்?
கடந்த திமுக ஆட்சியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘மகளிர் உரிமை தொகை’ திட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தை தொடர்ந்து இந்த திட்டம் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டு, வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் விஜய்.
அந்த வகையில், தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் ஏறி இருக்கிறது. ஆனால், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகளிடையே எழுந்துள்ளது. நிதி நிலைமையால் கடந்த திமுக அரசு கொடுத்து வந்தது போல, ரூ.1000 மகளிர் உரிமை தொகையை தவெக அரசும் கொடுத்து வருகிறது.
இதனிடையே மகளிர் உரிமை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மகளிர் உரிமை திட்டத்தில் இணைவதற்கு ரேஷன் கார்டு முக்கிய அம்சமாக திகழும் நிலையில், புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் ஏற்பட்ட தாதம் காரணமாக தகுதியுள்ள சிலரும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இணைய முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு புதிய ரேஷன் அட்டைகளை வழங்கும் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கு வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் பெண்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பதிலளித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூரில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அருண் ராஜிடம், ‘தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 உயர்த்தி வழங்கப்படுமா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “மாநிலத்தின் நிதி நிலைமை சரியில்லை. மாநிலத்தின் நிதி நிலைமை சீரானதும் அனைத்து பெண்களுக்கும் 2,500 ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




