நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் – யூடியூபர் மாரிதாஸ்க்கு ஆ.ராசா நோட்டீஸ்
தனக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் யூடியூபர் மாரிதாசுக்கு, நீலகிரி தொகுதி திமுக எம்.பி. ஆ.ராசா, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் தளத்தில் ஆ.ராசாவின் பேச்சு தொடர்பான இரு ஆடியோ கிளிப்களை வெளியிட்டிருந்தார். இது அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகக் கூறி, மாரிதாசுக்கு, ஆ.ராசா சார்பில் அவரது வழக்கறிஞர் ஸ்நேகா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
அதில், தனது பேச்சுக்களை ஆங்காங்கே துண்டித்து எடுத்து கோர்த்து பதிவு செய்துள்ளதாகவும், முழுமையாக பதிவு செய்யவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோக்களை உடனடியாக நீக்குவதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும், இல்லாவிட்டால், அவதூறு மற்றும் மான நஷ்டஈடு வழக்கு தொடரப்படும் எனவும் நோட்டீஸ் மூலம், ஆ.ராசா எச்சரித்துள்ளார்.
திமுக எம்.பி ஆ.ராசா உரையாடல் போன்ற ஒரு ஆடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் 2ஜி வழக்கு சமயத்தில் அவர் சிறையில் இருந்த அனுபவம், கட்சியினர் மீதான விமர்சனம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த ஆடியோ தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் ஆ.ராசா தரப்பில் தற்போது நீதிமன்றத்த்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




