நூற்றாண்டைக் கடந்து கம்பீரமாக நின்ற ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பழைய பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியை (ஷெர்சர் ஸ்பான்) அகற்றும் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளன. இப்பணிகள் காரணமாக, மே மாதம் இறுதி வரை பாம்பன் கடல் கால்வாய் வழியாக கப்பல்கள் மற்றும் படகுகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடல்வழி ரயில் பாலமான பாம்பன் பாலம், சுமார் 108 ஆண்டுகள் ராமேஸ்வரம் தீவை நிலப்பரப்புடன் இணைக்கும் முக்கியத் தடம் ஆக விளங்கியது. உலகின் இரண்டாவது அதிக உப்புத்தன்மை கொண்ட கடல் காற்று வீசும் இப்பகுதியில், இரும்புத் தூண்கள் துருப்பிடித்து பலவீனமடைந்ததால், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்வதற்காகத் திறக்கப்படும் 225 அடி நீளமுள்ள ‘ஷெர்சர் ஸ்பான்’ (Scherzer Span), முன்பு 81 டிகிரி வரை திறக்கப்பட்டு கப்பல்களுக்கு 200 அடி வரை வழிவிடும். ஆனால், அதன் கியர் அமைப்புகள் துருப்பிடித்ததால், சமீபத்தில் 25 தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் போராடியும் அதனை 15 டிகிரிக்கு மேல் திறக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அதனை வெட்டி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணியை மேற்கொண்ட ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனம், பழைய பாலத்தை அகற்றும் பணிக்காக ஒப்பந்ததாரரை நியமித்துள்ளது. மொபைல் கிரேன்கள் (Mobile Cranes) உதவியுடன் இரும்பு அமைப்புகள் வெட்டி எடுக்கப்படவுள்ளன. சுமார் 1,000 டன் எடையுள்ள இரும்பு மற்றும் கான்கிரீட் கழிவுகள் மண்டபம் ரயில்வே யார்டில் சேர்க்கப்படும். முதலில் பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பாதுகாக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
இரும்புத் தூண்கள் மீட்க முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இரும்பு கர்டர்களை வெட்டி எடுக்கும்போது விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக, மே 31-ம் தேதி வரை பாம்பன் தூக்குப் பாலம் வழியாக கப்பல்கள், விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் செல்லத் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் அறிவித்துள்ளது. புதிய பாலம் பயன்பாட்டிற்கு வநதநிலையில், பழைய பாலம் நினைவுகளுடன் விடைபெறுகிறது.






