கோவையிலிருந்து அன்னூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் துரிதமாகச் செயல்பட்டு, பேருந்தையே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றினர். இவர்களின் சமயோசிதச் செயலுக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அன்னூர் அரசுப் பணிமனைக்குச் சொந்தமான 45-C என்ற அரசு டவுன் பேருந்து நேற்று முன்தினம் காந்திபுரத்தில் இருந்து அன்னூர் நோக்கி கோவை – சத்தி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அத்திப்பாளையம் பிரிவைக் கடக்கும்போது, பேருந்தில் பயணித்த 78 வயது மேரி என்ற மூதாட்டி திடீரென மயங்கிச் சரிந்தார்.
இதைப் பார்த்த நடத்துனர் தினேஷ் குமார் (33), உடனடியாக ஓட்டுநர் மணிகண்டனுக்குத் தகவல் தெரிவித்தார். பேருந்தை சாலையோரம் நிறுத்திய இருவரும், மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பயணிகளிடம் அனுமதி கேட்டனர். பேருந்து மூலமாகவே மூதாட்டியை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
அத்திப்பாளையம் பிரிவிலிருந்து கணபதி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அரசுப் பேருந்தை மணிகண்டன் வேகமாக ஓட்டிச் சென்றார். அங்கு நடத்துனர் தினேஷ் குமார், மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியைத் தன் கைகளில் ஏந்தியபடி மருத்துவமனைக்குள் கொண்டு சென்று அனுமதித்தார்.
மருத்துவர்கள் அவசரகால முதலுதவி அளித்ததைத் தொடர்ந்து, மூதாட்டியின் உயிர் காப்பாற்றப்பட்டது. “உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதால் தான் மூதாட்டி காப்பாற்றப்பட்டார்” என்று மருத்துவர்கள், ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகளின் ஒத்துழைப்பைப் பாராட்டினர்.
கோவை – அன்னூர் அரசுப் பேருந்தில் பயணித்த 78 வயது மூதாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் நடத்துனர் தினேஷ் குமார் பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று அவரது உயிரைக் காப்பாற்றினர். இவர்களின் சமயோசிதச் செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் இந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் செயலுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அன்னூர் அரசுப் பேருந்து பணிமனை சார்பில், போக்குவரத்து கழக மேலாளர் மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய மணிகண்டன் மற்றும் தினேஷ் குமார் ஆகியோருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குறிப்பாக, நடத்துனர் தினேஷ் குமார், கடந்த மாதமும் (நவம்பர் 9, 2025) இதே 45-C பேருந்தில் நெஞ்சு வலியால் துடித்த ஒரு பயணியை மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் கடந்த மாதம் (09.11.25) அன்னூரில் இருந்து கோவைக்கு சென்ற 45-C பேருந்தில் பயணித்த போது சரவணம்பட்டி – அம்மன் கோவில் ஸ்டாப்பை சேர்ந்த ரவி (55) என்பவர் நெஞ்சு வலியால் உயிருக்கு துடித்த போது அரசு டவுன் பஸ் ஓட்டுனர் சசிகுமார் மற்றும் தற்போது மூதாட்டியை காப்பாற்றிய நடத்துனர் தினேஷ் குமார், அரசு டவுன் பஸ் மூலமாகவே குரும்பபாளையம் அருகில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.






