--- --:--:-- --

ஜெயலலிதாவ அண்ணாமலை எப்படிலாம் பேசினாரு – செல்லூர் ராஜு காட்டம்!

10

க்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்களும் நேற்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. விமர்சனங்கள், பதிலடிகள், வாதங்கள் என அரசியல் களமும் அனல் பறந்து வருகிறது.

 

கடந்த முறை ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்த அதிமுகவும் பாஜகவும் இப்போது தனித் தனி அணி அமைத்து களம் காணுகின்றன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகள் உள்ளன. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, ஓபிஎஸ் தரப்பு, தமமுக, தேவநாதனின் கட்சி, ஐஜேகே, புதிய நீதிக் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. பாஜக – அதிமுக தலைவர்கள் இடையே வார்த்தை மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

 

இந்த நிலையில் மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வாக்கு சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்காக மதுரை வந்திருந்தபோது அவரை பார்க்க மக்கள் சித்திரை திருவிழாவுக்கு வருவது போல சாரை சாரையாக வந்திருந்தனர். திமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. திமுக கூட்டணி வேட்பாளர் ஒன்றுமே செய்யவில்லை என்பதை பைனாகுலர் படம் பிடித்து காட்டினார் டாக்டர் சரவணன்” என்று தெரிவித்தார்.

 

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை செருப்புடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அண்ணாமலையே செருப்புக்கு சமமானவர்தான். சுதந்திர போராட்டம் போன்ற ஒன்றுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம். மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளை கொண்டதுதான் தமிழ் இனம். காங்கிரஸ் கட்சியை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிக்கு வராதபடி செய்ததுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம். அதனை கொச்சைப்படுத்துகிறார் என்றால் அண்ணாமலையின் தரம் எப்படி என்று புரிந்துகொள்ளுங்கள்.

 

அப்படியென்றால் இந்தி படித்தவர்கள் எல்லாம் எதற்காக தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வருகிறார்கள்? தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கல்வியில் படித்தவர்கள் வெளிநாடுகளில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். இதுகூட தெரியாதவராகத்தான் அண்ணாமலை இருக்கிறார்” என்று காட்டமாக விமர்சித்தார்.

 

மேலும், “டிடிவி தினகரனை அதிமுகவும் இரட்டை இலையும் தான் அடையாளம் காட்டியது. ஜெயலலிதாதான் அவரை வளர்த்தெடுத்தார். இப்போது ஜெயலலிதாவை அவதூறாக பேசிய அண்ணாமலையுடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரனுக்கு மானம் ரோஷம் இருக்கிறதா? அண்ணாவையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார் அண்ணாமலை. பாஜகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு தினகரன் பேசுவதை எல்லாம் பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon