தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 17,835 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 2739 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 12 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் உயிரிழந்ததால் 14 ஆக உயர்ந்துள்ளது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில்1.5 லட்சம் கொரோனா நோயாளிகளுக்குக் கூட சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், வசதிகள் தயாராக உள்ளன. அந்தளவிற்கு அதிகரிக்க வாய்ப்பில்லை என்றாலும் எந்த வித சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.