இத்தாலியில் பிரண்டசீ நகரில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
பிரின்டிசி நகரிலுள்ள திரையரங்கத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு தென்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1941 ஆம் ஆண்டு அந்த வெடிகுண்டை பிரிட்டிஷ் படையினர் வீசி இருக்கலாம் என கருதப்படுகிறது.
செயலிழக்கப்படாது அந்த வெடிகுண்டு ஒரு மீட்டர் நீளமும், 40 கிலோ டைனமைட் வெடிபொருட்களுடன் இருந்தது. பெரும் அச்சுறுத்தலாக இருந்த வெடிகுண்டை செயலிழக்க நிபுணர்கள் முடிவு செய்தனர். வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன .
54 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பிரின்டிசி விமான நிலையம், ரயில் நிலையம், இரண்டு மருத்துவமனைகளும் மூடப்பட்டன. பிரின்டிசி சிறையிலிருந்த 200 கைதிகள் அருகேயுள்ள லிசி சிறைக்கு மாற்றப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை பணிகள் முடிவடைந்த நிலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு பின் வெடிகுண்டு செயழிலக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகப் போர் காலத்தில் வீசப்பட்டு செயலிழக்காமல் இருக்கும் வெடிகுண்டுகள் இத்தாலிக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
கடந்த ஒன்றாம் தேதி தூரின் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு மற்றொரு வெடிகுண்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.