இராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு 8:15 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் கிளம்பியது.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு கருப்பையா (73) பயணம் செய்தார். பாம்பன் பாலத்தின் 87-வது தூணை கடந்து செல்லும் போது இரவு 8:40 மணிக்கு மித வேகத்தில் கடந்த ரயிலின் படிக்கட்டில் பயணித்த கருப்பையா தவறி கடலில் விழுந்தார்.
அப்போது அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீனவர் இருளாண்டி இது குறித்து பாலம் ஆப்பரேட்டரிடம் தகவல் தெரிவித்தார்.
இதன்படி ரயில்வே சிறப்பு எஸ்ஐ., துரை மற்றும் 2 போலீசார் துரிதமாக செயல் பட்டு பாம்பன் காளிதாஸ் என்பவரது நாட்டுப் படகில் சக மீனவர்களுடன் சென்று கடலில் விழுந்த கருப்பையாவை தேடினர்.
அங்கு பாறை பிடித்துக் கொண்டு தத்தளித்த கருப்பையாவை இரவு 10:45 மணியளவில் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு நலமாக உள்ளார்.
இது குறித்து வடகாடு போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இராமநாதபுரம் வந்த கருப்பையா மகன் அன்பரசன், தந்தையை அழைத்துச் சென்றார்.