கோவையில் ஒரே ஆண்டில் 195 பாலியல் வழக்குகள்
கோவை சரகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகம் பதிவாகி இருக்கின்றன. அங்கு ஒரே ஆண்டில் குழந்தைகள் மீதான 195 பாலியல் வன்கொடுமைகள் வழக்காக பதிவாகியுள்ளன. தமிழ்நாடு காவல்துறையில் மேற்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கி கோவை சரகம் இயங்கி வருகிறது.
இந்த நான்கு மாவட்டங்களில் நடந்த விபத்துகள், குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சரகத்தில் ஓராண்டில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 195 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் ஒரு வழக்கு தூக்கு தண்டனையும், 5 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், 12 வழக்குகளில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 14 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை சரகத்தில் மட்டும் 60 ஆயிரத்து 499 பேர் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இவ்வாண்டில் கோவை சரகத்தில் பதிவு செய்யப்பட்ட 116 கொலை வழக்குகளில் 113 கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கையில் உள்ளதாகவும், மேலும் 23 கொலை வழக்குகளில் ஈடுபட்ட நபர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததுடன் ஒரு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.





