விஜயின் செல்வாக்கை உதயநிதியால் ஜீரணிக்க முடியவில்லை: நாஞ்சில் சம்பத்
தமிழ்நாடு அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் எப்போதும் அனல் பறக்கும் விவாதப் பொருளாக இருப்பது, முதல்வர் ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் அரசியல் எதிர்காலம்தான். திரைத்துறையில் அதிகார பலம், மக்கள் செல்வாக்கு என இரு துருவங்களாக இருக்கும் இவர்களுக்கு இடையே நிலவும் அசாத்தியமான அரசியல் ‘ஈகோ’ யுத்தத்தை, அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத் தனது சமீபத்திய பேட்டியில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
” தி.மு.க. ஒரு வலிமையான கட்சி. ஆயிரமாயிரம் சோதனைகளைச் சந்தித்த கட்சி. மிசா என்கிற நெருப்பில் குளித்து எழுந்த கட்சி. அடக்குமுறைச் சட்டங்களை எதிர்கொண்ட கட்சி. ஆனால், விஜய்யின் எழுச்சிக்கு எதிராக நேரடியாக இறங்காதது எனக்கு வருத்தமளிக்கிறது.
உதயநிதி மேடையில் பேசும்போது, ‘இங்கு வந்துள்ள யாரும் என்னைப் பார்க்க வரவில்லை, என்னுடைய பேச்சைக் கேட்கத்தான் வந்திருக்காங்க’ என்று சொல்கிறார். மேலும், ‘அட்டகத்தி என்ன பார்க்க வந்தாங்க’ என்று இழிவாகப் பேசுவதையும் பார்க்க முடிகிறது.
அமைச்சர் உதயநிதி, விஜய்யை எதிர்ப்பதாக இருந்தால், ஓங்கி உயர்ந்த குரலில் நேரடியாக விமர்சிக்கலாம். அதை விடுத்து, விஜய்யை ‘மட்டந்தட்டி’ பேசுவது அவரது தரத்துக்குச் சிறிதும் நல்லது அல்ல.
உதயநிதி ஒரு மிகப்பெரிய அமைப்பின் இளைஞரணிச் செயலாளர். அவர் இப்படிப் பேசுவது, விஜய்க்கு வருகிற செல்வாக்கை அவர் உள்வாங்கிக் கொள்ளவில்லையா? உள்வாங்கிக் கொள்ள மனம் இல்லையா? என்பதைக் காட்டுகிறது. அப்படியென்றால், தி.மு.க.வுக்கு உள்ளுக்குள் ஓர் அரசியல் புறம்பல் இருக்கு என்பதே உண்மை! என்று நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் ஆவேசமாக கூறினார். அந்த உரையாடலில் அவர் கொதிப்புடன் கூறிய கருத்துகள், தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.






