கிசான் திட்டம் முறைகேடுகள் தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்கலாம்..!
கிசான் திட்டம் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கும் பிரதமர் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடுகள் நடந்தது வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்திருக்கும் சிபிசிஐடி காவல்துறையினர் இதுவரை 52 நபர்களை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தகவல்களை பொதுமக்கள் அதிகாரிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அளிக்கலாம் என சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி, வாட்ஸ்அப், ஃபேக்ஸ், மின்னஞ்சல் வாயிலாக தகவல்களை அளிக்கலாம் என்றும் தகவல் கொடுப்பவர்களின் ரகசியத் தன்மை பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.






