--- --:--:-- --

தெலுங்கு திரையுலக பாலியல் தொல்லை அறிக்கையை வெளியிடுங்கள்..!

8

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையைப் போலவே, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பான அறிக்கையை தெலங்கானா அரசும் வெளியிட வேண்டும் என்று பிரபல நடிகை சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஒட்டுமொத்த இந்திய சினிமா பிரபலங்களை அதிர வைத்தது அண்மையில் கேரளாவில் வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை. திரைப்பட பிரபலங்களான நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது சரமாரியான புகார்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

 

இந்த நிலையில் இதே பாணியில் தமிழ்நாட்டிலும் ஒரு குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, மலையாளம், தமிழ் திரையுலகைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 

அதில் கேரளாவில் wcc என்ற அமைப்பின் செயல்பாடுகளை தெலுங்கு நடிகையாக தாம் வரவேற்பதாக கூறியுள்ள சமந்தா, கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில், துணை அமைப்பாக தி வாய்ஸ் ஆஃப் உமன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

கேரளாவைப் போலவே தெலங்கானா அரசும், பாலியல் சீண்டல்கள் குறித்த தி வாய்ஸ் ஆஃப் உமன் அமைப்பின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள சமந்தா, அவ்வாறு வெளியிடப்பட்டால் தெலுங்கு திரையுலகில் பாதுகாப்பான பணியிடங்களை உருவாக்க முடியும் என்றும், அரசு மற்றும் திரைத்துறை சார்பில் திட்டங்களை வகுக்க உதவும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Right Menu Icon