திருப்பூர் மேயர் பதவிக்கு 49வது வார்டு கவுன்சிலரும், திருப்பூர் தி.மு.க. வடக்கு மாநகர பொறுப்பாளருமான தினேஷ்குமார், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூர் மேயராக, கடந்த மார்ச் முதல் வாரத்தில் தினேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பூருக்கு, 42 வயதே நிரம்பிய இளம் வயது மேயர் கிடைத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சுறுசுறுப்பானவர், சர்ச்சையில் சிக்காதவர், மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதால், இனி திருப்பூர் மாநகராட்சி ஒளிரும் என்று மக்கள் நம்பினர்.
அதேபோல், மேயர் தினேஷ் குமாரின் செயல்பாடுகளும் ஆரம்பத்தில் மிக வேகமாக இருந்தன. பள்ளிகளுக்கு சென்று அடிப்படை வசதிகளை ஆய்வு செய்வது, வார்டுகளுக்கு அடிக்கடி விசிட் செய்வது, மக்கள் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை என்று பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

அத்துடன், “குற்றம் குற்றமே” இதழுக்கு அளித்த பேட்டியில் கூட, மாநகரின் வளர்ச்சி ஒன்றே தனது குறிக்கோள்; இதில் அதிமுக – திமுக என்ற பாகுபாடு இருக்காது; வருகின்ற நாட்களில் புதிய திருப்பூரை உருவாக்க, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
ஆனால், இதெல்லாம் பதவி கிடைத்த கொஞ்ச நாளைக்குத்தான்; இப்போதெல்லாம் மேயர் தினேஷ்குமாரின் செயல்பாடுகளை பார்த்தால், பத்தோடு பதினொன்றாகத்தான் மேயர் இருக்கிறார். எங்கள் எதிர்பார்ப்பெல்லாம் பொய்த்துவிடுமோ என்று கவலைப்படுகிறோம் என்று, வார்டு மக்கள் “குற்றம் குற்றமே” நிருபர் குழுவிடம் தெரிவித்தனர்.
குறிப்பாக, மேயர் தினேஷ்குமாரின் சொந்த வார்டான 49 வார்டில் நிலவும் பல பிரச்சனைகளை பொதுமக்கள் நம்மிடம் ஆதங்கத்தோடு பட்டியலிடுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவித்ததாவது:
மேயர் தினேஷ் குமார், பதவிக்கு புதியவர்; இளம் தொழிலதிபர்; சுறுசுறுப்பானவர். பழக இனிமையானவர். அதேபோல் மக்கள் குறைகளை கனிவுடன் கேட்கிறார். ஆனால், இதனால் என்ன பயன்? பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டால் மட்டும் போதுமா? தீர்வு வேண்டாமா?
அவர் பதவிக்கு வந்து 100 நாட்களை கடந்து விட்ட நிலையில், இதுவரை சொல்லிக் கொள்ளும்படி ஏதாவது செய்திருக்கிறாரா என்று கேட்டால், ஏமாற்றம்தான் மிஞ்சும். திருப்பூர் மாநகருக்கு வேண்டாம்; குறைந்தபட்சம் தனது வார்டிலாவது எதையாவது உருப்படியாக செய்துள்ளாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, திட்டங்களை தொடங்கி வைப்பது, அதிரடி ஆய்வு, அறிக்கை வெளியிடுவது என்று பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நிஜத்தில் எதுவும் நடப்பதில்லை.

சாக்கடை வசதியின்றி, அங்குள்ள கடை, குடியிருப்புகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் தேங்கி, குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது. இங்கு வீட்டின் உரிமையாளர்கள் உள்ளூர்வாசிகள் என்றாலும், குடியிருப்போர் பெரும்பாலும் வெளியூர்வாசிகள் என்பதால், ஓட்டு கணக்கை பார்த்து அரசியல்வாதிகள் கண்டு கொள்வதில்லை.
மேயர் மனுக்களை வாங்குகிறார்; குறைகளை கேட்டறிகிறார். ஆனால், அதற்கு தீர்வு என்பது எட்டாக்கனியாக உள்ளது. மேயரின் செயல்பாடுகளை பார்த்தால் வெறும் வாய்ச்சொல் வீரரோ என்று நினைக்க தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொறுப்பேற்ற இளம் வயது மேயரான தினேஷ் குமார் மீது மக்கள் இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதே நேரம், புதிய நிர்வாகத்திற்கு தேனிலவு காலம் என்பது 100 நாட்களை கடந்துவிட்டது. இனியாவது, மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மேயர் தினேஷ்குமார் செயலாற்ற வேண்டும் என்பதே, வார்டு மக்களின் வேண்டுகோளாகும்.












