வாய்சொல்லில் வீரர்?  திருப்பூர் மேயரின் செயல்பாட்டால் மக்கள் ஏமாற்றம்.. வளர்ச்சிப்பணிகளில் இனியாவது வருமா மாற்றம்?

திருப்பூர் மேயர் பதவிக்கு  49வது வார்டு கவுன்சிலரும், திருப்பூர் தி.மு.க. வடக்கு மாநகர பொறுப்பாளருமான தினேஷ்குமார், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  திருப்பூர் மேயராக, கடந்த மார்ச் முதல் வாரத்தில் தினேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

திருப்பூருக்கு, 42 வயதே நிரம்பிய இளம் வயது மேயர் கிடைத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சுறுசுறுப்பானவர், சர்ச்சையில் சிக்காதவர், மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதால், இனி திருப்பூர் மாநகராட்சி ஒளிரும் என்று மக்கள் நம்பினர்.

 

அதேபோல், மேயர் தினேஷ் குமாரின் செயல்பாடுகளும் ஆரம்பத்தில் மிக வேகமாக இருந்தன.  பள்ளிகளுக்கு சென்று அடிப்படை வசதிகளை ஆய்வு செய்வது, வார்டுகளுக்கு அடிக்கடி விசிட் செய்வது, மக்கள் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை என்று பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

அத்துடன், “குற்றம் குற்றமே” இதழுக்கு அளித்த பேட்டியில் கூட, மாநகரின் வளர்ச்சி ஒன்றே தனது குறிக்கோள்; இதில் அதிமுக – திமுக என்ற பாகுபாடு இருக்காது; வருகின்ற நாட்களில் புதிய திருப்பூரை உருவாக்க, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

 

ஆனால், இதெல்லாம் பதவி கிடைத்த கொஞ்ச நாளைக்குத்தான்; இப்போதெல்லாம் மேயர் தினேஷ்குமாரின் செயல்பாடுகளை பார்த்தால், பத்தோடு பதினொன்றாகத்தான் மேயர் இருக்கிறார். எங்கள் எதிர்பார்ப்பெல்லாம் பொய்த்துவிடுமோ என்று கவலைப்படுகிறோம் என்று, வார்டு மக்கள் “குற்றம் குற்றமே” நிருபர் குழுவிடம் தெரிவித்தனர்.

 

குறிப்பாக, மேயர் தினேஷ்குமாரின் சொந்த வார்டான 49 வார்டில் நிலவும் பல பிரச்சனைகளை பொதுமக்கள் நம்மிடம் ஆதங்கத்தோடு பட்டியலிடுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவித்ததாவது:

 

மேயர் தினேஷ் குமார், பதவிக்கு புதியவர்; இளம் தொழிலதிபர்; சுறுசுறுப்பானவர். பழக இனிமையானவர். அதேபோல் மக்கள் குறைகளை கனிவுடன் கேட்கிறார். ஆனால், இதனால் என்ன பயன்?  பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டால் மட்டும் போதுமா? தீர்வு வேண்டாமா?

அவர் பதவிக்கு வந்து 100 நாட்களை கடந்து விட்ட நிலையில், இதுவரை சொல்லிக் கொள்ளும்படி ஏதாவது செய்திருக்கிறாரா என்று கேட்டால், ஏமாற்றம்தான் மிஞ்சும். திருப்பூர் மாநகருக்கு வேண்டாம்; குறைந்தபட்சம் தனது வார்டிலாவது எதையாவது உருப்படியாக செய்துள்ளாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

 

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, திட்டங்களை தொடங்கி வைப்பது, அதிரடி ஆய்வு, அறிக்கை வெளியிடுவது என்று பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நிஜத்தில் எதுவும் நடப்பதில்லை.

 

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், அவரது வார்டில் நிலவும் பிரச்சனையை உதாரணமாக சொல்லலாம். மேயரின் 49 வார்டு  ராக்கியாபாைளயம் பிரிவு, R.V.E. முதல் வீதியில்சாக்கடை பிரச்சனைக்கு முந்தை ஆட்சியாளர்கள் காலத்திலும் தீர்வு இல்லை; இப்போதும் அதே நிலை நீடிக்கிறது.

ஆக்கிரமிப்பால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

 

சாக்கடை வசதியின்றி, அங்குள்ள கடை, குடியிருப்புகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் தேங்கி, குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது. இங்கு வீட்டின் உரிமையாளர்கள் உள்ளூர்வாசிகள் என்றாலும், குடியிருப்போர் பெரும்பாலும் வெளியூர்வாசிகள் என்பதால், ஓட்டு கணக்கை பார்த்து அரசியல்வாதிகள் கண்டு கொள்வதில்லை.

 

மேயர் மனுக்களை வாங்குகிறார்; குறைகளை கேட்டறிகிறார். ஆனால், அதற்கு தீர்வு என்பது எட்டாக்கனியாக உள்ளது. மேயரின் செயல்பாடுகளை பார்த்தால் வெறும் வாய்ச்சொல் வீரரோ என்று நினைக்க தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொறுப்பேற்ற இளம் வயது மேயரான தினேஷ் குமார் மீது மக்கள் இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதே நேரம், புதிய நிர்வாகத்திற்கு தேனிலவு காலம் என்பது 100 நாட்களை கடந்துவிட்டது. இனியாவது, மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மேயர் தினேஷ்குமார் செயலாற்ற வேண்டும் என்பதே, வார்டு மக்களின் வேண்டுகோளாகும். 


கிளாசிக்காக ஒரு மோசடி! பூங்கா பராமரிப்பு என்ற பெயரில் பிரபல நிறுவனம் லாபம்.. ‘குற்றம் குற்றமே’செய்தியால் திருப்பூர் மாநகராட்சி வேகம்!

பூங்காவை பராமரிப்பதாகக் கூறிக் கொண்டு ஓசியில் விளம்பரங்கள் செய்து திருப்பூரைச் சேர்ந்த பிரபல நிறுவனம், மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. “குற்றம் குற்றமே” வார இதழ் சுட்டிக்காட்டியதை அடுத்து, அந்த விளம்பரங்களை அதிகாரிகள் மறைத்துள்ளனர்.

 

னியன் தொழிலுக்கு புகழ்பெற்ற திருப்பூரில், புதிது புதியாக பல நிறுவனங்கள் முளைத்து, பல முன்னணி ஜாம்பவான்களுக்கே சவால் விடுத்து வருகின்றன. போட்டி அதிகமாகிவிட்டன; போதாக்குறைக்கு, அரசு விதிகளின்படி, இத்தகைய நிறுவனங்கள் வேறுவழியின்றி, பொதுச்சேவை செய்வதாகக்கூறி, கணக்கிற்கு சில சமுதாயச் சேவைகளை செய்து வருகின்றன.

 

சேவை என்ற போர்வையில்….

 

ஒருசில நிறுவனங்கள், உள்ளபடியே சிறப்பாக சமுதாயச் சேவை செய்து, மக்களுக்கு தொண்டாற்றி வருவதை மறுக்க முடியாது. இன்னும் பல நிறுவனங்களோ, அரசுக்கு கணக்கு காட்டும் வகையிலும், பொது மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கிலும், சமுதாயப்பணியை ஒரு கேடயமாக்கிக் கொள்கின்றன. அறக்கட்டளையை தொடங்கி, சேவையாற்றிக் கொண்டே, கிடைக்கும் கேப்பில் தங்களது நிறுவனங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றன.

 

திருப்பூரில், சில பிரபல நிறுவனங்களின் உரிமையாளர்களும் இதில் அடங்குவர். இவர்கள் எல்லாம், திருப்பூரை வனம் ஆக்குவதாக்கூறி, இவர்கள் பணமாக்கும் வித்தையை செய்து வருகின்றனர். அங்குமிங்குமாக சில ஆயிரம் மரங்களை நட்டு, சுற்றுச்சூழலை பேணி காப்பதாகவும், பசுமைத் தோழன் என்றெல்லாம் கணக்கு காட்டி, மக்கள் காதில் பூ சுற்றுவது வாடிக்கையாக உள்ளது.

பூங்காவில் விதிமீறி விளம்பரங்கள்!

 

அவ்வகையில் தற்போது சர்ச்சையில் சிக்கி இருப்பது, கிளாசிக் போலோ என்ற பிரபலமான முன்னணி நிறுவனம் தான். டி சர்ட் உள்ளிட்டவற்றை தயாரித்து வரும் இந்த நிறுவனம், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், ஊடக முதலாளிகளிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தனது நிறுவனத்திற்கு விளம்பரம் தேடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலத்தில், அதிகாரிகளை தங்களது கைக்குள் போட்டுக் கொண்டு, சாமர்த்தியமாக டி சர்ட் பிராண்ட்டுக்கு ஓசியிலோ அல்லது மலிவு விலையிலோ விளம்பரங்களை செய்துள்ளது, கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

திருப்பூரில் ரயில்வே ஸ்டேஷன், மேம்பாலம், குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகள் சந்திக்கும் மையப்பகுதியில் ஈஸ்வர மூர்த்தி பூங்கா உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள இப்பகுதியில், நாலாபுறத்தில் இருந்து வாகனங்கள் வந்தாலும், இந்த பூங்காவும் அதன் சுற்றுச்சுவரும் பளிச்சென்று கண்ணில் படும் வகையில் உள்ளது.

 

“குற்றம் குற்றமே” குழு கள ஆய்வு

 

இந்த பூங்காவை தனது வணிக நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்த கிளாசிக் போலோ நிறுவனம், மாநகராட்சி அதிகாரிகளை அணுகி, பூங்காவை தாங்கள் பராமரித்து தருவதாகக் கூறி, அதற்கு பிரதி உபகாரமாக, சுற்றுச்சுவர்களில் பனியன் நிறுவன பிராண்ட் பெயரை, லோகோவை நாலாபுறமும் 20-க்கும் அதிகமான இடங்களில் வைத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக உள்ள இந்த விளம்பரத்தில், விதிமீறல் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், “குற்றம் குற்றமே” வார இதழ் நிருபர் குழு களமிறங்கியது. இதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் நமக்கு தெரிய வந்துள்ளது.

 

முன்பு திருப்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த அசோகன் காலத்தில் இத்தகைய விதிமீறல்கள் அதிகளவில் நடந்துள்ளது. அப்போதுள்ள ஆணையரும், அதிகாரிகள் சிலரும், சுய நலத்திற்காகவும் இத்தகைய விதிமீறலுக்கு அனுமதி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. அப்போதைய, 4வது மண்டலத்தின் உதவி ஆணையர் கண்ணன், உதவி பொறியாளர் ஹரி ஆகியோர், தங்களது பதவிக்காலத்தில் இத்தகைய விதிமீறல்களை கண்டும் காணாமல் உடந்தையாக இருந்துள்ளதாக, அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


ஆர்.டி.ஐ. மனுவுக்கு பதில் இல்லை

 

இவர்கள் எல்லோரையும் தங்களது கைப்பாவைபோல நடத்தி, மாநகராட்சி பூங்காவை பராமரிப்பதாககூறி, வணிக நிறுவனங்கள் தங்களது வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தி உள்ளன. ஈஸ்வரமூர்த்தி பூங்கா விளம்பர விவகாரத்திலும் இதுதான் நடந்துள்ளது. இது குறித்த தகவல்களை சேகரித்ததுடன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டோம்.

 

அதில், ஈஸ்வர மூர்த்தி பூங்கா பராமரிப்புக்கு என்று தனியாருடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதா? அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளனவா? அப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றால், என்ன தொகைக்கு எத்தனை ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது? பராமரிப்பு தனி என்றாலும் விளம்பரம் வைத்துக் கொள்ள தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? பூங்காவில் விளம்பரம் வைத்த வகையில், மாநகராட்சிக்கு இதுவரை கிடைத்த வருவாய் எவ்வளவு? என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டோம். ஆனால், அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் இல்லை.

 

இதையடுத்து, ஈஸ்வரமூர்த்தி பூங்கா சுற்றுச்சுவரில் உள்ள பனியன் நிறுவன விளம்பரம் தொடர்பாக, மாநகராட்சி
4வது மண்டல உதவி ஆணையரை “குற்றம் குற்றமே” தரப்பில் அணுகி கேட்டோம். அதிகாரி தரப்பிலோ மழுப்பலான பதிலே வந்தது. விளம்பரம் உடனடியாக அகற்றப்படும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், விதிமீறல் நடந்துள்ளது அப்பட்டமாக உறுதியாகி இருக்கிறது.


பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு!

 

இதேபோல், பிக்பஜார் அருகே சிறிய அளவிலான சாலையோர பூங்கா உள்பட நகரின் முக்கிய இடங்களிலும், எந்த பராமரிப்பும் செய்யாமல் சுய லாபத்திற்காக விளம்பரங்களை வைத்து, ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறது. ஒரு பூங்காவில், குறைந்தபட்சம் ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில், நகரின் பல இடங்களில் இத்தகைய நிறுவனங்களின் விதிமீறிய விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், தொழிலதிபர்களும் அதிகாரிகளும் விதிமீறல்கள் புரிவதால், மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தடைபடுகிறது. இதுபற்றி மாநகராட்சி ஆணையாளர் பிராந்தி குமார் பாடியிடம், நமது குற்றம் குற்றமே இதழ் தரப்பில் கேட்டபோது, விதிமீறல்கள், வருவாய் இழப்பு தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தற்போதைய உதவி ஆணையாளர் செல்வநாயகம் நம்மிடம் கூறுகையில். “இத்தகைய விதிமீறல் தொடர்பாக உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதிபட கூறினார்.

 

இதனிடையே, நமது “குற்றம் குற்றமே” இதழ் சுட்டியக் காட்டியதன் எதிரொலியாக, உதவி பொறியாளர் கோவிந்த பிரபாகர் , ஈஸ்வர மூர்த்தி பூங்கா சுற்றுச்சுவரில் உள்ள கிளாசிக் போலோ பிராண்ட் விளம்பரங்களை, உடனடியாக மறைத்துள்ளார். இதன் மூலம், விதிமீறல் நடந்துள்ளதும் உறுதியாகி இருக்கிறது.

 

சாட்டையை சுழற்றுவாரா மேயர்?

 

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமாக நகரில் உள்ள பல இடங்களில் இதுபோன்ற விதிமீறல்களும், அதனால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பும் உள்ளது என்பது, நமது கள ஆய்வில் தெரிய வருகிறது.

 

மாநகராட்சியின் புதிய மேயர் தினேஷ்குமார், வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை தருவோம் என்று உறுதி அளித்துள்ளார். எனவே, அவரும், மண்டலத் தலைவர்களும், உதவி ஆணையர்களும் உடனடியாக நகரில் உள்ள விதிமீறல் விளம்பரங்கள், பூங்கா பராமரிப்பு பணிகளை, கள ஆய்வு செய்ய வேண்டும்.

அத்துடன், அதிகாரிகளை வளைத்தோ, அல்லது மோசடியாக ஏமாற்றியோ, மாநகராட்சிக்கு ஏற்படுத்திய இழப்பீடுகளை வட்டியுடன் தொழிலதிபர்களிடம் வசூலிக்க வேண்டும்; விதிமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.


அதிகார போதையில்’சி.இ.ஓ?!  மதுவிழிப்புணர்வு குழுவுக்கு அனுமதி மறுப்பு.. மாநகராட்சி அனுமதி கொடுத்தும் இறுமாப்பு!!

து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, திருப்பூர் மாநகராட்சி அனுமதி தந்தும், மாவட்ட சி.இ.ஓ. அனுமதி தராததோடு அவமதித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் ஓய்வு பெறப்போகும் சி.இ.ஓ. ‘அதிகார போதை’யில் இருந்து தெளிவு பெற வேண்டுமென்று, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

தமிழகத்தில் மது பயன்பாடு அதிகமுள்ள மாவட்டங்களில், திருப்பூர் முதன்மையானது. இங்கு, மதுவின் தீமை குறித்தும், அதற்கு அடிமையானவர்களை மீட்பது குறித்தும் விழிப்புணர்வு அவசியமாகிறது. இந்த நிலையில், ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA) என்ற அமைப்பு, திருப்பூரில் மது விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது.

 

அதன்படி, மதுவில் இருந்து மீட்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாணவர்களுக்கு இடையூறின்றி இரவு 7 மணி முதல், 8:30 வரை இரவு நேரத்தில், பள்ளி வளாகத்தில் நடத்த முடிவு செய்தது. இதற்காக, அந்த அமைப்பின் சார்பில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடியிடம் அனுமதி கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

இக்காலகட்டத்தில், அதுவும் திருப்பூர் போன்ற, மதுபானம் அதிகளவில் விற்பனையாகும் நகரில், மது குறித்த விழிப்புணர்வு தேவைதான் என்று கருதிய மாநகராட்சி ஆணையாளரும், பள்ளி வளாகத்தில் பாதிப்பின்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கினார்.

 

அத்துடன், பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்துதால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும், ஒப்புதல் பெற்றுக் கொள்ளும்படி, ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்புக்கு, மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதையடுத்து, மது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அந்த அமைப்பினர், மாவட்ட சி.இ.ஓ அலுவலகத்திற்கு, அனுமதி வேண்டி சென்றுள்ளனர்.

 

அதிகார போதையில்’சி.இ.ஓ. ரமேஷ்?!

 

ஆனால், சம்மந்தப்பட்ட அமைப்பினரை மாநகராட்சி நிர்வாகம் நடத்திய முறைக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடத்தப்பட்ட முறைக்கும் இருந்த வித்தியாசம் கண்டு, அமைப்பினரே அதிர்ந்து போயினர். காரணம், முதன்மை கல்வி அலுவலகத்தில், அந்த அமைப்பினருக்கு எந்தவொரு முக்கியத்துவமும் தரவில்லை; அனுமதி கேட்கச் சென்றவகளை, உட்காரக்கூட சொல்லாமல், நிற்க வைத்தே பேசியுள்ளனர். அத்துடன், அனுமதி தர முடியாது என்பதை, அலட்சியமாகவும் அதிகார தோரணையிலும் கூறி, அவமதித்து அனுப்பி இருப்பதாக, சம்மந்தப்பட்ட அமைப்பினர் வேதனையோடு தெரிவித்தனர்.

 

இன்னும் ஓரிரு மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மதுவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வந்தவர்களை அவமதித்து அனுப்பியது, ‘அதிகார போதை’யே காரணம்; அதில் இருந்து அவர், இனியாவது தெளிவு பெற வேண்டுமென்று , சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


‘குற்றம் குற்றமே’போஸ்டர்கள் கிழிப்பு: திருப்பூரில் பரபரப்பு!‘அன்பகம் திருப்பதி’ தரப்புக்கு தோல்வி பீதியா?.. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவது நீதியா?

திருப்பூரில், தேர்தல் கள நிலவரத்தை வெளியிட்ட ‘குற்றம் குற்றமே’ வார இதழ் போஸ்டர்களை, அதிமுகவின் ஒரு தரப்பினர் கிழித்தெறிந்தது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தோல்வி பயத்தில், பத்திரிகை சுதந்திரத்தில் குறுக்கிடுவதை ஏற்க முடியாது என்று , சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் பிப். 17ம் தேதி இன்று மாலையுடன் நிறைவடைவதால், இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதனிடையே, திருப்பூரில் உள்ள தேர்தல் நிலவரம், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்த கள நிலவரத்தை அலசி, ஆராய்ந்து “குற்றம் குற்றமே” வார இதழில், சிறப்புக் கட்டுரைகள் வெளியாகி, வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

 

அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டு நிலவரம் குறித்து, “குற்றம் குற்றமே” வார இதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. “வெங்கடாசலத்துக்கு ஜெயம்! அவப்பெயரால் திருப்பதிக்கு பயம் !! என்ற தலைப்பில், விரிவால அலசல் வெளியாகி இருந்தது.

 

போஸ்டர்கள் கிழிப்பு

 

அதில், மக்களுடன் மக்களாக பழகும், திமுக வேட்பாளர் தம்பி வெங்கடாசலத்தில் கையே, வார்டில் ஓங்கி இருப்பதாகவும், வார்டு முழுக்க நல்ல பேரு.. வெற்றி வாய்ப்பு நூற்றுக்கு நூறு” என்றும்
வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டாலும், அமைச்சருக்கு உரிய பந்தாவுடன் அதிமுகவை சேர்ந்த அன்பகம் திருப்பதிக்கான வெற்றி வாய்ப்பு குறைவு என்றும் “குற்றம் குற்றமே” இதழ், மக்களின் உண்மையான மன நிலையை சுட்டிக் காட்டியிருந்தது. மேலும், இந்த செய்தி தொடர்பான போஸ்டர்கள், திருப்பூர் நகரில், அனுமதி பெற்ற இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன.

 

இந்த நிலையில், 42வது வார்டில், அன்பகம் திருப்பதியின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்ட சிலர், இந்த செய்தியை படித்த பின்னர் ஆவேசமடைந்தனர். “குற்றம் குற்றமே” வார இதழ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை கிழித்தெறிந்து, தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.

 

தோல்வி பீதியா?

 

ஜனநாயகத்தின் 4வது தூணாக பத்திரிகைகள் விளங்குகின்றன. அத்தகைய பத்திரிகைகள், தேர்தலின் போது களநிலவரத்தை ஆராய்ந்து கட்டுரையை வெளியிட, சட்டத்தின்படி அனைத்து சுதந்திரமும் உள்ளது. அப்படியிருக்க, அன்பகம் திருப்பதியின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டு சில குண்டர்கள், பத்திரிகை போஸ்டர்களை கிழித்து, தங்களது எதிர்ப்பை காட்டியிருப்பது, சமூக ஆர்வலர்களையும், பத்திரிகையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வெற்றியோ தோல்வியோ அதை நெஞ்சுரத்துடன் ஏற்பதே, ஒரு அரசியல்வாதிக்கு அழகு. அதுபோல், பத்திரிகை செய்திகளை பார்த்து பதற்றமடைவதும், தோல்வி பயத்தால் பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்க முற்படுவதும் கோழைத்தனம்.

 

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, அன்பகம் திருப்பதியின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், இத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டால், ஒருவேளை வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வார்களோ? என்று வாக்காளர்கள் நினைக்க மாட்டார்களா? கள நிலவரத்தை நேரில் ஆராய்ந்து உண்மையை பத்திரிகைகள் உரக்கச் சொல்லும்போது, அது தங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால், பத்திரிக்கையை மிரட்டும் போக்கை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்” என்றனர்.

தோலுரித்து காட்டும்..

 

சமுதாயத்தில் நிலவும் அவலங்களை, ஊழல், முறைகேடுகளை தோலுரித்து காட்டுவதே “குற்றம் குற்றம்” இதழின் தலையாய பணி. இதில் எப்போதுமே சமரசம் செய்து கொண்டதில்லை. நேர்மையும், துணிவுமே எங்களின் ஆயுதம். வாசகர்களே எங்களின் கவசம். எனவே, குற்றம் எங்கும் நிகழ்ந்தாலும் “குற்றம் குற்றமே” வார இதழ் தொடர்ந்து தட்டிக் கேட்கும்!